திருப்பாதுகமாலை
வேதமுடி யேறுதிரு வீறுபெறு மாறன்
றாதியரி யோதுகவி வாதியரி யென்றே
கோதுகல மீதுதலை கோடிமறை பாடச்
சோதியரு ணீதிநெறி வேதியனு தித்தான்.
ஓதியரு மறைதானே யோதுமறை தானாகி
ஓதுமறை முடிப்பொருளாய்த் தனைநல்கு மோரிறைவன்
பாதமலர் தாங்குமதிப் பெருங்காதற் பாதுகமீ
தோதுதிரு வாயிரநூ லோங்குகசீர் பல்லாண்டே.
ஒருதனை யொக்க மிக்க வொருவரிங் கற்ற வுண்மை
தெரியிரு மறையி னுச்சி யிறைமைகூ றொருமை நாமக்
குருவர னொருக னாவிற் குணநிதி யரங்க நாதன்
குரைகழ னிலைகு லாவுங் குணமொழி வழங்கி வாழ்வாம்.
போதநால் வேத நாவொன் றொழிந்தவே றெந்த நாக்கொண்
டாதிமா வரங்க நாதன் பாதுகப் புனித மீக்கூற்
றோதுமா றென்ற தோர வோருமம் மறையி னோங்கற்
சோதிவாய் மலர்ந்து மிழ்ந்த சுடர்மொழிச் சோதி வாழி.
விரி யாயிர முடி யேறிய விழி யாயிர மெனமூ
துரை யாதிய னிறை யாய்மறை முடி யாய்திரு வடியா
யிர மாரரு ளது தானிறை நிலை தேறிய நலனே
தெரி யாயிர மறை நாறிய பெரி யாரருள் பெறுவாம்.
இர வென்றொரு பொரு வில்வரு மிர வில்லுரி மறைவில்
தர வென்றள வறு தண்ணளி தரு தன்னொளி நிறைவில்
இரு வையக வள வென்றொரு கள வன்றரு ளிறைவன்
சர ணன்றறை மறை மாணிறை நிறை தாளிணை பணிவாம்.